வேதாரண்யம்: .நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்புநித்தியானந்தம் (38). அமமுக நிர்வாகியான இவர், ரெடிமேடு ஜவுளி விற்பனை கடை வைத்துள்ளார். இவரது மகன் முகேஷ்கண்ணன் (20). இவர் ஐடிஐ படிக்கும்போது, தன்னுடன் படித்த ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. தற்போது 2 பேரும் சென்னையில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைபார்த்து வருகின்றனர். இந்த காதல் விவகாரம் நித்தியானந்தத்துக்கு தெரியவந்தது. அவர், இளம்பெண்ணிடம் செல்போனில் பேசி, ‘‘உன்னை எனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். அதுபற்றி உன்னிடம் பேச வேண்டும். எனது வீட்டுக்கு தனியாக வா’’ என்று அழைத்தார். இதையடுத்து 3 நாட்களுக்குமுன் அவரும் சென்னையில் இருந்து தனியாக கிளம்பி நித்தியானந்தம் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்ட நித்தியானந்தம், வீட்டில் இருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் வலுக்கட்டாயமாக கட்டிவிட்டார். இதைசற்றும் எதிர்பார்க்காத அவரை மிரட்டி, 2 நாள் வீட்டிலேயே அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தனது நண்பர் அவுரிக்காட்டை சேர்ந்த சக்திவேல் வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று விட்டு விட்டார். இதனிடையே இந்த விவகாரம் முகேஷ்கண்ணனுக்கு தெரியவந்தது. அவர் நேற்றுமுன்தினம் இரவு, அவுரிக்காடு சென்று தனது காதலியை மீட்டார். பின்னர் தாலியை அறுத்து எறிந்து விட்டு, வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று புகார் செய்தார். அதன்பேரில் நித்தியானந்தம், இவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் சக்திவேல் (47), இவரது மனைவி வள்ளி (38) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.